பொள்ளாச்சி, செப். 15: பொள்ளாச்சியை அருகே உள்ள குரங்கு அருவியில் நேற்று, வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து பெய்த கனமழையால், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் வரதுவங்கினர். பிற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.