குரங்கு அருவியில் குவிந்த வெளியூர் சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி, செப். 15: பொள்ளாச்சியை அருகே உள்ள குரங்கு அருவியில் நேற்று, வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம்  துவக்கத்திலிருந்து பெய்த கனமழையால், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் வரதுவங்கினர். பிற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதில் நேற்று சனிக்கிழமையை என்பதால்  வெளியூர் சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகம் வந்திருந்தனர். அவர்கள், அருவியில் வெகுநேரம் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். சிறுவர்கள், அருகே குளம்போல் தேங்கிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேலும் தடையை மீறி அடர்ந்த வனத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: