நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் சகிக்க முடியாத துர்நாற்றத்தால் பொது மக்கள் அவதி

கோவை, செப்.15:கோவை மாவட்டத்தில் நீர் நிலைகளில் தொழிற்ச்சாலைகளின் திடக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் சாக்கடை கழிவு நீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் பொது மக்கள் வசிக்கவேண்டிய அவல நிலை உள்ளது. நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிடக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பஞ்சாலைகள், இரும்பு உருக்கு ஆலைகள், மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள், ரப்பர் தொழிற்சாலைகள், வெட் கிரைண்டர்கள் உற்பத்தி நிறுவனங்கள் என பல ஆயிரக்கணக்கக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள் இயங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு ஆலாந்துறை, மாதம்பட்டி, தெலுங்குபாளையம், பேரூர், குனியமுத்துார், போத்தனூர், நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், பட்டணம், இருகூர், ராவுத்தூர், சூலூர், சோமனூர் வழியாக திருப்பூர் செல்கிறது. பெரும்பாலான தொழிற்சாலைகள் நீர் நிலைகளையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ளது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகள் மற்றும் திரவ கழிவுகளை நீர் நிலைகளில் விடுகின்றனர். நீர் நிலைகளில் தொடர்ந்து கழிவு நீர் செல்வதால் பல்வேறு முட்செடிகளை வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், கழிவு நீர் செல்வது யாருக்கும் தெரிவதில்லை. இந்நிலையில் கழிவு பஞ்சுகள், கழிவு துணிகள், அட்டை பெட்டிகள் உட்பட பல்வேறு பொருட்களை கொட்டுகின்றனர். இது குறித்து கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் நிலைகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்வது இல்லை.  

இதனால், நீர் வழி ஓடைகளின் இரு கரைகளிலும்  ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நொய்யல் கரையோரங்களில் வசிக்கும் ஒரு சிலர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பன்றிகளுக்கு உணவாக ஓட்டல் கழிவுகள், காய்கறி கழிவுகள், மீதமான உணவு பொருட்களை கொடுக்கின்றனர். இவை அனைத்தும் நீர் நிலைகளில் கொட்டப்படுவதால் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. நீர் நிலைகளில் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக உப்புதன்மைகொண்ட தண்ணீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தோல் அரிப்பு உட்பட பல்வேறு தோல் நோயால் அவதிப்படுகின்றனர்.

நீர் நிலைகளின் அருகில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை நீர் நிலைகளில் விடுகிறார்களா என்பது குறித்து பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்யும் தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை முடக்கி அபராதம் வசூலிக்க வேண்டும். மின் இணைப்புகளை நிரந்தரமாக துண்டிக்க வேண்டும். கோவை மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க தொழிற்சாலை கழிவுகளை கொட்டும் நிறுவனங்களுக்கு நிரந்தரமாக மின் இணைப்பு துண்டிக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு சொந்தமான பொருட்களை பறிமுதல் செய்தால் மட்டுமே நீர் நிலைகளில் சுகாதாரமான நீரோட்டத்தை காணமுடியும். சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க முடியுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: