செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணி

செங்கல்பட்டு, செப். 11: செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில்  உள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், சுரங்கப்பாதை பணி தொடங்கப்பட்டு, இதுவரை முடிக்காமல் கிடப்பில் உள்ளது.

இதனால் செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், வல்லம், தேனூர், பட்டரைவாக்கம், குன்னவாக்கம், அம்மணம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆபத்தான முறையில், ரயில் தண்டவாளத்தை கடந்து செங்கல்பட்டு நகருக்கு செல்கின்றனர். சிலர் 5 கிமீ துரம் சுற்றி ரயில்வே மேம்பாலத்தை கடந்து செங்கல்பட்டு நகருக்கு செல்கின்றனர். மேலும், சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் செடி கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. ரயில்வே துறை  சுரங்கப்பணியை முடித்து 3 ஆண்டுகள் ஆகியும், அதற்கான இணைப்பு சாலை அமைக்காமல்  நெடிஞ்சாலைத் துறை காலம் தாழ்த்தி வருகிறது. பொதுமக்களின் நலன் கருதியும் ரயில் விபத்தை  தவிர்க்கவும் ராட்டின கிணறு அருகே கிடப்பில் போட்டுள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: