கடலூர், செப். 11: கடலூர் மஞ்சக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு உட்பட்ட பெண்ணை ஆற்றின் கரைக்கு அருகே சுடுகாட்டில் எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய திமுக நகர் மன்ற தலைவர் தங்கராசு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர் உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு தகன மேடை அமைக்க திட்டம் அமல்படுத்தப்பட்டது. திட்டத்தின்படி இரண்டு பகுதியிலும் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனால் மஞ்சக்குப்பம் பகுதியில் மட்டும் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பில் செலவிடப்பட்டு கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை சாதனங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் பழுது அடைந்துள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகிறது.