திருப்பத்தூர், செப்.11: திருப்பத்தூர் பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டி மரியாதை செய்ததால் வாகன ஓட்டிகள் வியப்படைந்தனர்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் மற்றும் போலீசார் நேற்று மாலை திருப்பத்தூர் பஸ் நிலையம், புதுப்பேட்டை ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஆகிய பகுதிகளில் திடீரெ 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பெண்கள் ஹெல்மெட் அணிந்து வருவதைப் பார்த்த டிஎஸ்பி அவர்களுக்கு சால்வை அணிவித்து சாலையிலேயே மரியாதை செலுத்தினார். அப்போது, நீங்கள் தங்கள் உயிரை பாதுகாக்க ஹெல்மெட் அணிந்து வருவதால் உங்களுக்கு நாங்கள் மரியாதை செய்கிறோம் என்றார். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.