புதுச்சேரி, செப் 10: புதுச்சேரி பெற்றோர் மாணவர் நலச்சங்க தலைவர் வை. பாலா வெளியிட்டு அறிக்கை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்காக 54 இடங்கள் ஒதுக்கபடுகிறது. நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற்றதாக ஜிப்மர் நிர்வாகம், வருவாய்த்துறை செயலர், கலெக்டர், கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வெளிமாநில மாணவர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கப்பட்டனர். இதனையும் மீறி 3 பேர் போலியாக புதுச்சேரி இருப்பிடச்சான்றிதழ் பெற்று ஜிப்மரில் விண்ணப்பித்தனர்.இது குறித்து எங்களுடைய சங்கத்தின் மூலம் புகார் அளித்தோம். இதற்கிடையே ஜிப்மர் நிர்வாகம் போலி ஆவணங்கள் கொடுத்து எம்பிபிஎஸ் சேர்ந்த புகாரில் புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் குமாரிடம் விசாரணை நடத்தியது. அப்போது போலி ஆவணங்கள் கொடுத்ததற்காக உங்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டுள்ளனர். இதில் தொடர்புடைய எம்பிபிஎஸ் மாணவி கிருத்திகா தலைமறைவாகியுள்ளார். ஜிப்மர் மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதியுடன் முடிவுற்றது.