திருச்சி, ஆக.21: திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, ஆர்டிஓக்கள், தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் ஆகிய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது தாசில்தார்கள் உடனடியாக பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். நிலஅளவை துறையில் மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி 30 நாட்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டும். குறிப்பாக, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய தாலுகாக்களில் நிலஅளவை தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் நிலுவை இல்லாமல் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மற்ற 9 தாலுகாக்களிலும் நிலஅளவை துறையில் அதிக அளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளது. அடுத்து வருகின்ற ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும். மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் நிலஅளவை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.