குண்டாசில் 2 ரவுடிகள் கைது

திருச்சி, ஆக.22: திருச்சி அடுத்த நம்பர் 1 டோல்கேட் வாளவந்தபுரத்தை சேர்ந்தவர் மூக்கன் (49). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாமண்டபம் சுதர்சன் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரங்கம் சங்கர்நகரை சேர்ந்த ரவுடி நவீன் (எ) நவீன்குமார்(33) என்பவர் அங்கு வந்து மூக்கனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்து சென்றார். இது குறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே நவீன் மீது 3க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதம் நடந்து கொள்வதால் நவீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ரங்கம் இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சிறையில் உள்ள நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சிறையில் உள்ள நவீனிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது.

போலீசை வெட்டியவர் கைது: கடந்த ஜூலை 8ம் தேதி அரியமங்கலத்தில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபரை பிடிக்க சென்ற ஏட்டு ஹரிஹரன் என்பவரை அரியமங்கலம் உக்கடையை சேர்ந்த ரவுடி இஸ்மாயில் (35) அரிவாளால் வெட்டினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரியமங்கலம் போலீசார் இஸ்மாயிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள இஸ்மாயில் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளது. தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தம் விதம் நடந்து கொள்வதால் இஸ்மாயிலை குண்டாசில் கைது செய்ய கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனை ஏற்ற கமிஷனர் அமல்ராஜ், சிறையில் உள்ள இஸ்மாயிலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள இஸ்மாயிலிடம் வழங்கப்பட்டது.

Related Stories: