திருச்சி-தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் விதமாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் டிசம்பரில் திறக்க வாய்ப்பு

திருவெறும்பூர், ஆக.22: திருச்சி-தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் விதமாக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் வரும் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புள்ளதால் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு கல்லணை வழியாக கனரக வாகனங்கள் சென்று வரும் பொருட்டு ஒரு புதிய உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டுமென திருச்சி தஞ்சை மாவட்ட பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதை தொடர்ந்து கல்லணை கொள்ளிட ஆறு பகுதியில் திருச்சி-தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும் உயர் மட்டம் பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.67 கோடி செலவில் அமைக்கப்படுமென்று அறிவித்ததோடு அதற்கான பணிகளையும் உடனடியாக தொடங்கியது. இந்த உயர் மட்ட பாலத்தில் கனரக வகனங்கள் ஒரே நேரத்தில் 3 வாகனம் செல்லும் அளவிற்கு 12.90 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் சுமார் ஆயிரத்து 50 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. அதன்படி ஒரு பில்லருக்கும் மற்றொரு பில்லருக்கம் இடையே 42 மீட்டர் இடைவெளிவிட்டு கல்லணையிலிருந்து கொள்ளிட ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்போது தண்ணீரின் வேகத்தை தடுக்காத வகையில் 24 பில்லர்கள் கொள்ளிட ஆற்றில் அமைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டது இதில் 11 நேர் பில்லர்கள் 8 வளைவு பில்லர்கள் மற்றும் 5 நேர் பில்லர்களாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பில்லருக்கும் மற்றெரு பில்லருக்கும் 42 மீட்டர் நீளத்தில் பீம் பொருத்தப்பட்டு அதன் மீது கான்கிரேட் ரோடு அமைக்கப்படுகிறது. அதற்காக 42 மீட்டர் நீளத்தில் 100 பீம் அமைக்கப்பட்டு அதை வைக்க முயற்சித்தபோது கடந்த ஆண்டு வந்த வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டு பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் புதிதாக பீம்கள் தயார் செய்யப்பட்டு தற்போது அவை அனைத்தும் முழுமையாக பில்லர்கள் மீது வைத்து முடிக்கப்பட்டு விட்டது.

 

மேலும் இடைப்பட்ட நேரத்தில் பீம்கள் வைக்கப்பட்ட 15 டெக்குகளில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. மீதமுள்ள 10 டெக்குகளில் இனி பணிகள் முடியும் பட்சத்தில் வரும் டிசம்பரில் பாலம் திறக்க வாய்ப்புள்ளது. இந்தப்பாலம் திறக்கப்பட்டால் திருச்சி-தஞ்சை மாவட்டங்களில் இருந்து கல்லணை வழியாக கனரக வாகனங்கள் எளிதாக சென்றுவர முடியும். மேலும் இந்த வழியாக சென்றால் பூம்புகார், கடலூர், சிதம்பரம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவது எளிதாகும். இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து வசதி மற்றும் பஸ்வசதி கிடைப்பதால் இந்தப் பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடையும். மேலும் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும் குறைந்து விடும் இப்படி பலச்சிறப்புகளை கொண்ட கல்லணை பாலத்திறப்பு விழாவிற்கு திருச்சி தஞ்சை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories: