பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

கோவை, ஆக.22:கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான  குறுமைய, குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நேற்று கோவை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கியது. இதனை மாநகராட்சி கமிஷனர் ஷரவன்குமார் ஜடாவத் துவக்கிவைத்தார். இதில், 100மீ, 1,500மீ ஓட்டம், தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இரண்டு நாட்களுக்கும் நடக்கும் போட்டியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 41 பள்ளிகளை சேர்ந்த 1,091 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், முதல் நாளான நேற்று நடந்த 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 1,500 ஓட்டத்தில் ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி கிருத்திகா முதலிடம் பிடித்தார். சிஎஸ்ஐ பள்ளி மாணவி சந்தியா 2ம் இடமும், ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி சிருஷ்டி 3ம் இடமும் பிடித்தனர்.

மாணவர்களுக்கான 1,500மீ ஓட்டத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவன் சஞ்சய் முதலிடமும், ரங்கம்மாள் பள்ளி மாணவன் சித்தேஷ் 2ம் இடமும், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி மாணவன் விஷ்ணுபிரியன் 3ம் இடமும் பிடித்தனர். 19 வயது பிரிவு போட்டியில், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி மாணவன் வெங்கடேஷ் முதலிடமும், மணி பள்ளியை சேர்ந்த ராகுல், ஆனந்த் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். மும்முறை தாண்டுதல் போட்டியில் டி.கே.எஸ் பள்ளியின் மானோன்மணி முதலிடமும், ராமகிருஷ்ணா பள்ளி மாணவி மிருதுளா 2ம் இடமும் பிடித்தனர். தொடர்ந்து இன்று இறுதி போட்டிகள் நடக்கிறது.

Related Stories: