மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே சொத்துவரி விதிப்பு, பெயர் மாற்றம் சான்றிதழ்கள் வழங்கப்படும்

கோவை, ஆக. 22: கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே சொத்துவரி விதிப்பு மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து கட்டிடங்கள், வீடுகள் மற்றும் உணவகங்களில் அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சொத்துவரி விதிப்பு மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் சான்றிதழ்கள் பெற மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அவசியம் ஏற்படுத்திருக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியிருப்பதாவது:  ோவை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சொத்துவரி விதிப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புகைப்படம் இணைத்து பெறப்படும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இருப்பினும், சமீப காலங்களில் சொத்துவரி விதிப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புகைப்படம் இணைக்கப்படாமலிருப்பது தெரிய வருகிறது. எனவே சொத்துவரி விதிப்பு மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் கோரி பெறப்படும் விண்ணப்பங்களில், சம்மந்தப்பட்ட கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பகுதி மற்றும் அதனருகே நின்று எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படம் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் சொத்துவரி விதிப்பு மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் கோரும் விண்ணப்பங்களின் மீது நேராய்வு செய்யும் போது சம்மந்தப்பட்ட கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்து சான்றளிக்கப்பட்ட பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகளில் எவ்வித குறைபாடுகளோ, சுணக்கமோ கண்டறிப்பட்டால் சம்மந்தப்பட்ட  அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: