யானைகள் வாழ்விட மேம்பாட்டு பணிக்கு ரூ.4.50 கோடி ஒதுக்கீடு

கோவை, ஆக.22:தமிழகத்தில் யானைகள் வாழ்விட மேம்பாட்டு பணிகளுக்காக 4.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் 2,761 யானைகள் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி மாவட்டத்தில் யானை மனித மோதல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சில இடங்களில் யானைகள் மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டு வேறு வனத்தில் விடப்பட்டது. கோடை காலம் மட்டுமின்றி மழை காலங்களிலும் மனித யானை மோதல் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டில் மாநில அளவில் யானைகள் தாக்கி 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். யானைகள் வாழ்விட பகுதி மேம்பாடு திட்டத்தை நடப்பாண்டில் அமலாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இதற்கான திட்ட பணிகள் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ‘‘ யானைகளின் இடப்பெயர்ச்சியை கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது. உணவு, தண்ணீர் மட்டுமின்றி இதர காரணங்களுக்காக யானைகள் ஒரு வனத்தை விட்டு வேறு வனத்திற்கு செல்கின்றன. யானைகளின் வலசை பாதை (காரிடார்) கட்டடம், புதிய மாற்றங்கள் அவற்றின் இடப்பெயர்ச்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக யானைகள் குடியிருப்பு, கிராமங்கள், ேதாட்டங்கள் நோக்கி செல்வதால் அபாயம் ஏற்படுகிறது. சிலர் வனத்திற்குள்ளும், வன எல்லையிலும் புதிய மாற்றங்களை செய்கின்றன. இதை யானைகள் விரும்பவில்லை. யானைகளின் மேம்பாட்டு பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் புதிய பணிகள் நடத்தப்படும். 4 ஆயிரம் மனித வேலை நாட்கள் என்ற அடிப்படையில் பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. யானைகளின் வலசை பாதையில் தண்ணீர் வசதி அமைத்தல், பழுதான குட்டை, தடுப்பணை, நீர் தேக்கம் சீரமைத்தல், வலசை பாதையில் உள்ள தடைகளை அகற்றுதல், யானைகள் வந்து செல்லும் இடங்களில் இடையூறாக உள்ள பொருட்களை அகற்றுதல், வனத்திற்குள் அத்துமீறி ெசன்று குவிவதை தடுத்தல் போன்ற பணிகள் நடத்தப்படும், ’’ என்றனர்.

Related Stories: