சேலம், ஆக.22: சேலத்தில் 4வது நாளாக நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை வரை கனமழை கொட்டியது. இதனால், விவசாய நிலங்களில் உழவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதமான மழையால், மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டியது. மாநகர பகுதியில் டவுன், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி என அனைத்து இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளம் போல், பெருக்கெடுத்து ஓடியது.