காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில், கோயில் வளாகத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்ட 18 உண்டியல்களில் 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் ₹9.9 கோடி ரொக்கம், 164 கிராம் தங்கம், 4959 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம், கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை சிறப்பாக நடந்தது. இதில் உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து சுமார் 1 கோடிக்கு மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு 18 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டன. அதில், ஏராளமான பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி சென்றனர்.