சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (30), இப்ராஹிம்ஷ்கா (25) ஆகிய இரண்டு பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியாவுக்கு சென்றுவிட்டு வந்திருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது 18 பழைய லேப்டாப்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ₹1 லட்சம். பின்னர் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது ஆசனவாயில் 450 கிராம் தங்க கட்டிகளை வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ₹17.5 லட்சம்.