திருவொற்றியூர்: திருவொற்றியூர் 10வது வார்டு தியாகராஜ சுவாமி கோயில் அருகே உள்ள குளக்கரை தெருவில் இலவச கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை திருவொற்றியூர் மண்டலம் சார்பில் புதுப்பிக்கப்பட்டு துப்புரவு பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கழிப்பறையை தினமும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள மின் மோட்டார் சரியாக செயல்படாததால் தண்ணீர் வரவில்லை. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தண்ணீர் இல்லாமல் இந்த கழிப்பிடம் பூட்டி கிடப்பதோடு சுத்தம் செய்யப்படாததால் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது. இதுகுறித்து ஆகஸ்ட் 5ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் முருகன் தலைமையில் அதிகாரிகள் குளக்கரை தெருவில் உள்ள கழிப்பிடத்தை ஆய்வு செய்தனர்.