பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பில் இட்லி கடை நடத்தி வருபவர் மேரி. இவருக்கு 2 மகன்கள். 2வது மகன் கோகுலகிருஷ்ணன் (24). கடந்த 17ம் தேதி பெரியபாளையம் கோயிலுக்கு சென்றுவிட்டு பைக்கில் கோகுலகிருஷ்ணன் வீடு திரும்பிபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பைக் மோதி சுயநினைவை இழந்தார்.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அன்று மாலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 19ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது.இதனை அடுத்து மூளைச்சாவு பற்றியும் உடல் உறுப்பு தானம் பற்றியும் கோகுலகிருஷ்ணன் குடும்பத்தினரிடம் துயர்நிலை ஆலோசகர் எடுத்து கூறினார். அதன்பிறகு, தமிழக அரசு உறுப்பு அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் கோகுலகிருஷ்ணனின் கல்லீரல், வலது மற்றும் இடது சிறுநீரகம், இதய வால்வு மற்றும் கணையம் ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.