வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்திற்கு செப்.9ல் சிறப்பு முகாம் தொடக்கம்

மதுரை, ஆக. 20:  மதுரையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய செப்.9ல் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து அக்.14ம் தேதி வரை 4 முறை முகாம் நடைபெற உள்ளது.    தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்.1ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்காக செப்.9, செப்.23, அக்.7 மற்றும் அக்.14 ஆகிய தேதிகளில், அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அன்றைய தினம் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.

இதில் 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2000 டிச.31 மற்றும் அதற்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். இந்த புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம் (6) ஐ பூர்த்தி செய்து தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம். மேலும் பெயர் நீக்கத்திற்கு படிவம்-7, வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம்-8, முகவரி மாற்றத்திற்கு படிவம்-8ஏ வழங்கலாம். இதுதவிர, ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்கள், தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என சரி பார்த்துக் கொள்ளலாம். இது குறித்து கலெக்டர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ தெரிவித்துள்ளார்.

Related Stories: