திருச்சி, ஆக.20: திருச்சி மாநகராட்சி பகுதி வீரேஸ்வரத்தில் முதன் முறையாக மழைநீர் சேகரிப்பு வசதியுடன் கூடிய சிமெண்ட் சாலையை மாநகராட்சி நிர்வாகம் அமைத்த முயற்சிக்கு பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.திருச்சி மாநகராட்சி 5வது வார்டில் உள்ள வீரேஸ்வரத்தில் சிமெண்ட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், முதற்கட்டாக அனைத்து வீடுகளும் பாதாளசாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலை அமைக்க அதிகாரிகளால் டெண்டர் விடப்பட்டு ரூ.48லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் நடந்தது. இதில் 280மீட்டர் நீளத்திற்கும், சராசரி 5மீட்டர் அகலத்திற்கும் இந்த சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் போது தனியார் தரைவழி கேபிள்கள் செல்வதற்கு தனிவசதி ஏற்பட்டது. அதே போல் மழைநீரை சேகரிக்க சாலையின் இருபுறத்திலும் வாய்க்கால் ஏற்படுத்தி சிமெண்ட் கான்கிரீட் போட்டு மூடப்பட்டது.