வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் மந்தகதியில் நடக்கும் தரைப்பாலப்பணி

கூடுவாஞ்சேரி, ஆக. 20: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 18 கிமீ தூரம் கொண்டது. இந்த நான்கு வழி சாலை கடந்த 2012ம் ஆண்டு ₹40 கோடியில் அமைக்கப்பட்டது. மேலும், இந்த சாலையோரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் சாலையோரத்தில் உள்ள ரத்தினமங்கலம், நல்லம்பாக்கம், கொளப்பாக்கம் உள்பட பல்வேறு ஏரிகள் உடைந்தன. இதனால், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சாலை மற்றும் சென்டர் மீடியன்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த சாலையில் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சென்டர் மீடியன் இதுவரை சீரமைக்கவில்லை.இதற்கிடையில், கொளப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார் தோல் கம்பெனி எதிரில் உள்ள தரைப்பாலத்தை அகற்றிவிட்டு பல லட்சம் மதிப்பில் புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக, மந்த கதியில் நடந்து வருகிறது.

இதனால், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் எதிரும், புதிருமாக போட்டி போட்டு கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.நல்லம்பாக்கம் கிராமத்தில் சட்ட விரோதமாக இயங்கும் 50க்கும் மேற்பட்ட கிரஷர்களில் இருந்து டிப்பர் மற்றும் டாரஸ் லாரிகளில் ஜல்லி கற்கள் மற்றும் எம்சாண்டு உள்ளிட்ட கனிமங்களை ஏற்றி கொண்டு, சென்னை புறநகர் பகுதிகளுக்கு வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக செல்லும் லாரி டிரைவர்கள் அதிவேகத்துடன் லாரிகளை ஓட்டுகின்றனர்.இதில் டிரைவராக வேலை பார்ப்பவர்கள், 18 வயதுக்கு குறைவானவர்களும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களும், குடிபோதையில் லாரிகளை ஓட்டுபவர்களாகவும் உள்ளனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

அப்போது, லாரிகளை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி, கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் அரசு மற்றும் மாநகர பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதில் பயணம் செய்யும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டும், காணாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மந்தகதியில் நடக்கும் தரைப்பால பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: