ஆவடி, ஆக. 20: ஆவடியை அடுத்த கன்னடபாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை 10ஆண்டுக்கு மேலாக உடைந்து கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.ஆவடி மாநகராட்சி, 3வது வார்டில் கன்னடபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 1000க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் சென்னை, புறநகர் பகுதிகளுக்கு கன்னடபாளையம் பகுதி பஸ் நிறுத்தம் வந்து, அங்கிருந்து பேருந்தில் சென்றுவருகின்றனர். இங்கு பல ஆண்டுக்கு முன்பு பயணியர் நிழற்குடை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் அமைக்கப்பட்டது. இது பயணிகளுக்கு மழை, வெயில் காலத்தில் பாதுகாப்பாக இருந்தது.இதற்கிடையில், சில ஆண்டுக்கு முன்பு பெய்ந்த மழை, சூறாவளி காற்றால் பயணிகள் நிழற்குடையின் ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்து கிடக்கிறது.இதுகுறித்து அப்பகுதிக்கு பொதுமக்கள் கூறுகையில், கன்னடபாளையம் பயணிகள் நிழற்குடையை கன்னடபாளையம், கொள்ளுமேடு, வெள்ளானூர் பகுதி மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்குடை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடைந்து கிடக்கிறது. இதனால், கோடைகாலத்தில் சுட்டு எரிக்கும் வெயிலால் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், மழைக்காலத்தில் உடைகள் நனைந்து பாழாகிறது. அங்குள்ள ஒரே ஒரு சிமென்ட் இருக்கையும் தரையை ஒட்டியுள்ளதால் பயணிகள் உட்கார முடியவில்லை. மேலும், அந்த இருக்கையும் சேதம் அடைந்துள்ளது.