திருவாரூர், ஆக. 20: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெற கல்வி நிலையங்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் ஐ.டி.ஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்பில் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் கிருத்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு தேசிய கல்வி உதவித் தொகையானது www.scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக மத்திய அரசின் மூலம் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காணும் இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.