சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் அபாயம்

திண்டிவனம், ஆக. 20: திண்டிவனத்தில் முக்கிய வீதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அங்காளம்மன் கோயில் எதிரே உள்ள மொட்டையன் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அவ்வழியாக தினமும் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த தெருவில் ஏராளமான மருத்துவக் கழிவுகளும், ஓட்டல் எச்சில் இலைகளும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் முகம்சுளித்தபடி செல்கின்றனர். குப்பைத்தொட்டி இல்லாத இடத்தில் மருத்துவக் கழிவுகளையும், உணவு பொருட்களையும் கொட்டுவதால் அவை சாலை முழுக்க சிதறிக்கிடக்கின்றன. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: