வேலூர், ஆக.14: தமிழகம் முழுவதும் பழுதடைந்த அலுவலகங்களுக்கு பதிலாக 300 ஊராட்சி அலுவலகங்கள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில், 79,394 குக்கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியில் தனித்தனியாக ஊராட்சி மன்ற அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும். இதனால் அலுவலகம் பழுதடைந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய ஊராட்சி அலுவலகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி புதிதாக ஊராட்சி அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி கட்டிடத்திற்கு தலா ₹19 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் முதற்கட்டமாக 300 ஊராட்சி அலுவலனங்கள் கட்ட ₹59 கோடியே 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.