மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரம் மின் விளக்குகள் பொருத்தாததால் மொட்டையாக நிற்கும் கம்பங்கள்

கரூர், ஆக. 14: கரூர் பிரதான சாலைப்பகுதியில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரம் உள்ள கம்பங்களில் தெரு விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு பிரதான சாலையில் இருந்து சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரம் தெரு விளக்கு வசதிக்காக மின்கம்பங்கள் நடப்பட்டும், இதுநாள் வரை தெரு விளக்கு பொருத்தாமல் உள்ளதால் இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியாக செல்லும் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் மாணவர்கள் விடுதியும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மின்கம்பங்கள் நடப்பட்டும், தெரு விளக்கு பொருத்தாத காரணத்தினால். இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்திட முடியாத நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவைப்படும் பட்சத்தில் தெருவிளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: