ஊட்டி, ஆக. 14: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி துவங்கி மழை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து கடந்த வாரம் முழுக்க கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்த மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் 150க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோல், பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உணவு மற்றும் ஆடைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மழை ஓய்ந்து 3 நாட்களுக்கு மேலாகியும் முகாம்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்படவில்லை. காரணம், சென்னை வானிலை மையம் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வெளியேற்றாமல் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.