பசுந்தேயிலைக்கு மாதவிலை நிர்ணயம்

மஞ்சூர், ஆக. 14: கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு கடந்த ஜூலை மாதத்திற்கான மாதவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 65ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதை முன்னிட்டு மாவட்டத்தில் 15 கூட்டுறவு ஆலைகளும் 100க்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகிறது. இதில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒரு முறை இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் மூலம் மாதவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கான தொகை வழங்கப்படுகிறது.  இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்திற்கான விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு ஆலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்தில் மஞ்சூர், கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் கிலோவிற்கு ரூ.13.50, கூடலுார் சாலீஸ்பரி கூட்டுறவு ஆலையில் ரூ.12.50, குந்தா (எடக்காடு), பிக்கட்டி, மேற்குநாடு, இத்தலார், நஞ்சநாடு, கிண்ணக்கொரை, மகாலிங்கா, கரும் பாலம், பந்தலுார் கூட்டுறவு தொழிற்சாலைகளில் கிலோவிற்கு ரூ.11, பிராண்டியர், பிதர்காடு கூட்டுறவு தொழிற்சாலைகளில் ரூ.10 எப்பநாடு கூட்டுறவு தொழிற்சாலையில் கிலோவிற்கு ரூ.9.50 ஆக மாத விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே போதிய மழை பெய்யாதததால் கடும் வறட்சி ஏற்பட்டு தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு மாதவிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அன்றாட செலவினங்கள், தேயிலை தோட்டப்பராமரிப்பு, தொழிலாளர்கள் கூலி கொடுப்பது உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Related Stories: