ஊட்டி, ஆக. 14: ெதாட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டு ஒரு மாத்திற்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு மட்டும் செல்லாமல், தொட்டபெட்டாவை காணவும் செல்கின்றனர். தொட்டபெட்டா செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இச்சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், இச்சாலையில் வாகனங்கள் செல்லவே மிகவும் சிரமப்பட்டன. குறிப்பாக, சிறிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஊரக முகமை சார்பில் ரூ.1.6 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணிகளை கடந்த இரு மாதங்களுக்கு முன் துவக்கியது.
இதற்காக மே மாதம் 28ம் தேதி முதல் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகளும் வேகமாக நடந்தது. சாலை சீரமைப்பு பணிகள் கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்தது. எனினும், இச்சாலை ஒரு மாத்திற்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.