ஈரோடு, ஆக.14: பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு பாட புத்தகங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால், காலாண்டு தேர்வு நெருங்கியும் பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.தமிழகத்தில் நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 4, 5ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட வில்லை.