ஈரோடு, ஆக. 14: ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படும் என மின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு, நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் 2 யூனிட் மூலம் தலா 15 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும்.இதில், ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணை நவீனமானது. மற்ற தடுப்பணைகளில் 1,200 கன அடி தண்ணீர் வந்தாலே மின் உற்பத்தி துவங்கப்படும். ஆனால், வெண்டிபாளையம் தடுப்பணையில் 2,500 கன அடி நீருக்கு மேல் வந்தால்தான் தானியங்கி மூலம் மின் உற்பத்தி துவங்கும். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இந்த தண்ணீர் இன்று காலை அல்லது மதியத்திற்குள் ஈரோடு வந்தடையும்.