கந்தர்வகோட்டையில் ஸ்டவ் அடுப்பால் 2 வீடுகள் தீக்கிரை கணவன், மனைவி படுகாயம்

கந்தர்வகோட்டை, ஆக.14: கந்தர்வகோட்டையில் ஸ்டவ் அடுப்பில் இருந்து கிளம்பிய தீயால் 2 வீடுகள் தீயில் கருகியது. இதில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர்.கந்தர்வகோட்டை செட்டிச்சத்திரம் தெருவில் வசிப்பவர் சாவித்திரி(34). இவர் நேற்று வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது குபீரென ஸ்டவ் அடுப்பில் இருந்து கிளம்பிய தீயால் வீட்டின் மேற்கூரைகள் முழுவதும் எரிந்து நாசமானது. தீ மளமளவென எரிந்த நிலையில் அருகில் இருந்த கண்ணன் என்பவர் வீடும் தீப்பற்றி எரிந்தது. உடனே கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் மேற்கூரைகள் முழுவதும் தீக்கிரையானது.

தீப்பிடித்த சமையத்தில் வீட்டின் உள்ளே எரிவாயு சிலிண்டர் இருந்தது. இது அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. சிலிண்டர் இணைப்பு டியூப் மட்டும் எரிந்துள்ளது. அதற்குள் தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை பத்திரமாக வெளியே கொண்டு வந்து விட்டனர். சிலிண்டர் வெடித்திருந்தால் பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். தீ விபத்தில் காயமடைந்த சாவித்திரியை மீட்க போன அவரது கணவர் ராஜேந்திரனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரையும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தீ விபத்தில் இருவரது வீடுகளிலும் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: