திருமயம், ஆக.14: ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. நேர்முக தேர்வு முடிந்தும் உறுதியான தகவல் இல்லாததால் பல இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணிகளை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் படி மாவட்ட நிர்வாகம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி அரிமளம் ஒன்றியத்தில் கே.செட்டிபட்டி பஞ்சாயத்தில் ஒரு காலி பணியிடம், திருமயம் ஒன்றியத்தில் அரசம்பட்டி, குழிபிறை, லெம்பலகுடி, மேலூர், பி.அழகாபுரி, புலிவலம் உள்ளிட்ட மாவட்டத்தில் 42 ஊராட்சி செயலளார்கள் காலிப்பணியிடத்துக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அந்ததந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் அரசு வேலையில் சேரும் நோக்கில் தகுதியானவர்கள் ஆர்வமுடன் விண்ணபித்தனர்.இந்நிலையில் விண்ணபித்து பல மாதங்களுக்கு பிறகு ஊராட்சி செயலாளர் பணிக்காக விண்ணபித்தவர்களை நேர்முக தேர்வுக தேர்வுக்கு அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதனிடையே சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக கூறி மீமிசலை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்து பணி வழங்கும் ஆணைக்கு தடை வாங்கியதாக தெரிகிறது. இந்நிகழ்வு நடந்து ஒரு வருடம் ஆன நிலையில், இதனை எதிர்த்து வாதிட்டு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதில் மாவட்ட நிர்வாகம் அக்கரை காட்டுவதாக தெரியவில்லை. இதனால் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் எதற்காக மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை அரசு நிரப்புவதாக அறிவித்து எங்களை காக்க வைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதே கால்நடை உதவியாளர் பணிக்கு வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பும் பல தடங்களை சந்தித்து இது வரை எந்த முடிவும் எட்டப்படாமல் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்ற மக்களை ஏமாற்றும் வேளைகளை கைவிட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் வெளியிட்ட அனைத்து அரசு பணிகளையும் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.