வேப்பூர், ஆக. 14: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மதுரவள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் மாயமூர்த்தி என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமங்களம் ஊராட்சியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாட்டு கச்சேரி நடைபெற்றது. இதை பார்க்க சென்ற மாயமூர்த்தி மகன் ஆனந்தகுமாருக்கும், பெரியசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெரியசாமி, செந்தில்குமார், கருணாநிதி, மணிகண்டன், மகேந்திரன், முத்தழகன், ஜெய்சங்கர், வடிவேல், சூர்யா, மணிவண்ணன் ஆகிய 10 பேர் சேர்ந்து ஆனந்தகுமாரை தாக்கியுள்ளனர். மேலும், பாட்டு கச்சேரி முடிந்து வந்த பிறகு மதுரவள்ளியில் அவரை தாக்கி உள்ளனர். இது குறித்து மாயமூர்த்தி, வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்அளித்தார். புகாரின் பேரில் பெரியசாமி உள்பட 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, அதில் மகேந்திரன், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.