விருத்தாசலம் அருகே பேருந்தில் சென்ற பெண்ணிடம் 1 லட்சம் நகை, பணம் அபேஸ்

விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் அருகே பேருந்தில் சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை அபேஸ் செய்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள இருசாளகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மனைவி விருத்தாம்பாள் (45). இவர் தனது குடும்பத்துடன் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இருசாளகுப்பத்துக்கு சொந்த வேலை காரணமாக மகளுடன் பஸ்சில் சென்றுள்ளார். விருத்தாசலம் பாலக்கரை அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, தான் வைத்திருந்த கைப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் 2 தோடு, 3.5 பவுன் தங்க நகை, ரூ.4 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். பின்னர் புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தம் சென்று தான் இருந்த இடத்தில் கைப்பையை தேடினார். ஆனாலும் கிடைக்கவில்லை. விருத்தாம்பாள் பேருந்து ஏறுவதற்காக புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து இருந்த போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்களை கண்காணித்து வந்துள்ளார். அவர் விருத்தாசலம் மார்க்கமாக செல்வதாக அப்பகுதியில் பேசிக் கொண்டே இருந்துள்ளார். பின்பு வேறு ஒரு பேருந்தில் ஏறி நெய்வேலி மார்க்கமாக சென்றுவிட்டார். அதனால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: