ஆலங்குளம், ஆக. 14: ஆலங்குளம் நகரிலிருந்து சுமார் இரு கிலோமீட்டர் தொலைவில் ஒக்கநின்றான் பொத்தை மலை அமைந்துள்ளது. ராமர் கோயில் மலை என்றழைக்கப்படும் இதனைச்சுற்றி அத்தியூத்து, கழுநீர்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, மாயமான்குறிச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், இந்த மலையடிவாரத்தில் உள்ளது. இந்த மலைப்பகுதி வனத்துறையினரால் பாதுகாக்கப்படும் வனப்பகுதியாகும். இங்கு மான், மிளா, நரி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளும், தேசிய பறவையான மயிலும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இதில் பகல் நேரங்களில் மயில்களும், இரவில் மான்களும் இரை தேடியும், தண்ணீர் தேடியும் மலையடிவார பகுதியில் உள்ள வயல்களுக்குள் இறங்குவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், வனத்துறையிடம் புகார் அளிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை மலையில் இருந்து விலங்குகள், ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில நேரங்களில் மான்கள், நெல்லை - தென்காசி சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி பலியாகின்றன. கடந்த 2 மாதத்தில் மட்டும் 6க்கும் மேற்பட்ட மான்கள், இச்சாலையோரம் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.