மயிலாடுதுறை, ஆக.14: நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், கோடை காலத்திற்காக நீரை சேமிப்பதற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதனுடைய ஒரு பகுதியாக குடிமராமத்து திட்டம் ஊரக வளர்ச்சித் திட்டம் மூலமாக நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1982 குளங்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தது இரண்டு குளங்களாவது எடுத்து முழுமையாக தூர்வாரப்பட்டு, அந்தக் குளத்திற்கு தேவையான படித்துறை பொதுமக்களுக்கு தேவையான மற்றைய வசதிகளும் ஏறத்தாழ ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்காக 186 தூர்வாரும் பணிகளுக்காக சிறப்பு ஒதுக்கீடாக ஏறத்தாழ ரூ.12.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த தூர்வாரும் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளாவது தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் இந்த தருணத்தில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, அதன்படி வழங்கப்பட்டுள்ள 186 பணிகளில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பாதிப்பு இல்லாத பணிகள் எவை என்று கண்டிறிந்து அந்தப்பணிகளை முதற்கட்டமாக எடுத்துக் கொள்வதற்கும் தண்ணீர் வரும்போதும் தூர்வாரும் பணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது என்பது இரண்டாம் கட்டப்பணிகளாகவும், தண்ணீர் வரும்போது பாதிப்பிற்குள்ளாகும் பணிகளை பின்பு அதாவது பிப்ரவரி மாதத்தில் எடுத்துக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்தப்பணிகள் அனைத்தும் 3 வகையாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.