மயிலாடுதுறை, ஆக.14: மயிலாடுதுறையில், கல்லணைபூம்புகார் சாலையில் சிறிய தூறல் மழைக்கே தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கால்டெக்ஸ் பெட்ரோல் பங்கை ஒட்டி கல்லணைபூம்புகார் சாலை அமைந்துள்ளது, மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் கால்டெக்ஸ் பெட்ரோல் பங்கையொட்டி கிழக்கே திரும்பி பூம்புகாரை நோக்கி செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியானின் வடபுற சாலையைவிட தென்புற சாலை பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் சிறிய தூரல் தூரினாலே மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தண்ணீர் சேர்வதுபோல் பல்வேறு இடங்களிலிருந்து தண்ணீர் ஓடிவந்து அந்த சாலையின் பள்ளத்தில் தேங்கி விடுகிறது. சுமார் 50 மீ தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகளாலும், வாகனங்களாலும் செல்வது சிரமமாக உள்ளது. மேலும் பல்வேறு இடங்களிலிருந்து அடித்துவரும் சாக்கடை மற்றும் குப்பைக்கழிவுகள் அங்கே தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாவதும் வாடிக்கையான ஒன்றாகும். தூய்மை இந்தியா என்று நகராட்சி படாதபாடு பட்டாலும் நெடுஞ்சாலைத்துறையினரால் இந்த பள்ளம் ஒரு பிரச்னையாகவே உள்ளது.