நாகை, ஆக.14: நாக மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கஜா புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்கள் பட்டியலை ‘ஆவாஸ்ப்ளஸ்’ இணையத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதால் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.நாக மாவட்டத்திலுள்ள 434 கிராம ஊராட்சிகளிலும் நாளை (15ம் தேதி) சுதந்திர தின கிராம சபா கூட்டம் நடைபெறுகிறது.இதில் ஜூன்2019 முதல் ஜூலை 2019 வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை மற்றும் குடிநீர் சிக்கனம் குறித்து விவாதம் செய்யப்படும்.ஊரகப் பகுதிகளில் கொசுக்கள் வாயிலாக உருவாகும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல், ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள். 14வது மத்திய மான்ய நிதியினை கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் செலவினம் மேற்கொள்வது. அரசாணை எண் 84ன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் தடை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்துதல்.