மஞ்சூர், ஆக.11: மஞ்சூர்- கிண்ணக்கொரை சாலையில் 4வது நாளாக நேற்றும் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர் கிண்ணக்கொரை மற்றும் அப்பர்பவானி சாலைகளில் அதிகளவு மரங்கள் விழுந்து வருகின்றன.கடந்த 3 நாட்களில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்த நிலையில் 4வது நாளாக நேற்று காலை கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரம் விழுந்தது. இதேபோல் கேரிங்டன் பகுதியிலும் மரங்கள் விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிண்ணக்கொரை, இரியசீகை மற்றும் மஞ்சூர் பகுதிகளில் இருந்து சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் அனைத்து சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் விரைந்து சென்று சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக வனத்துறையினரும் பயணிகளும் ஈடுபட்டு மரங்களை வெட்டி அகற்றி சீரமைத்தனர். இதை தொடர்ந்து சுமார் 3மணி நேர தாமதத்திற்குபின் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் போக்குவரத்து துவங்கியது. இதபோல் குந்தாபாலம் ராமைய்யா பிரிட்ஜ் அருகே நேற்று மாலை ராட்சத கற்பூர மரங்கள் வேறோடு சாய்ந்து ரோட்டில் விழுந்து. இதனால் மஞ்சூர் ஊட்டி, குன்னுார் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
757 பேர் முகாம்களில் தஞ்சம்: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் நேற்று முன்தினமும் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்டு ,அண்ணாநகர் ெதாட்டகம்பை சேரனுார், பிக்கட்டி பேரூராட்சிகுட்பட்ட கவுண்டம் பாளையம், சிவசக்திநகர் பகுதிகளில் வீடுகள் இடிந்தது. தக்கர்பாபாநகர், பாரதியார்புதுாரில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் குந்தா தாசில்தார் சரவணன், தனி வட்டாட்சியர் மகேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் வருவாய்துறையினர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் நிலவரப்படி கன்னேரிமந்தனை, எமரால்டு, மேல்குந்தா, பிக்கட்டி உள்பட குந்தா தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள 6 முகாம்களில் மொத்தம் 757 பேர் தங்க வைக்கபட்டுள்ளனர்.
இவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிக்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள முகாமில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களுக்கு நேற்று குந்தா ரோட்டரி சங்கத்தின் சார்பில் தலைவர் லட்சுமணன், செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் கேப்டன் ராமசந்திரன், சுரேஷ்குமார், விவேக் ஆனந்த் உள்ளிட்டோர் உணவு பொருட்களை வழங்கினார்கள்.