பந்தலூர், ஆக.11: பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றுப்பகுதி, உப்பட்டி புஞ்சைவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை, பாக்கு, தேயிலை தோட்டங்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து சேதமானது. பந்தலூர் வட்டத்தில் 15க்கும் மேற்பட்ட முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நெல்லியாளம் டேன்டீ பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதிய வசதிகள் செய்து தராததால் மக்கள் சிரமப்பட்டனர். அனைத்து முகாம்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு தன்னார்வ இளைஞர்கள், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். மேலும், அனைத்து துறை அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.