வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை கணவருக்கு 10 ஆண்டு சிறை தூத்துக்குடி மகிளா கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி, ஆக. 11: தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம்  மகாநகரை சேர்ந்தவர் சுப்பையா. முக்காணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது  மகள் தனலட்சுமிக்கும், முத்தையாபுரம் மேலத்தெருவை தெருவை சேர்ந்த  சுப்பிரமணியன் மகன் சஞ்சய் (36) என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி திருமணம்  நடந்தது. ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து சஞ்சய், திருமணத்தின்போது தனலட்சுமி குடும்பத்தினரிடம் 50 பவுன் நகையும், 4 சென்ட்  இடமும் வரதட்சணையாக  பெற்றுள்ளார். திருமணம் முடிந்து சில மாதங்களில்  சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் மேலும் 100 பவுன் நகை, கார் மற்றும்  சுப்பையா புதிதாக கட்டி வந்த வீடு ஆகியவற்றை கேட்டு தனலட்சுமியை  கொடுமைப்படுத்தியுள்ளனர்.     இதனால் விரக்தியடைந்த தனலட்சுமி, கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் தனலட்சுமியின் கணவர் சஞ்சய் மற்றும்  மாமியார் சீதாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு  விசாரணை காலத்தில் சீதாலட்சுமி இறந்து விட்டார். இந்நிலையில் வழக்கை விசாரித்த  தூத்துக்குடி மகிளா கோர்ட்டு நீதிபதி சி.குமார் சரவணன், வரதட்சணை கொடுமை  வழக்கில் சஞ்சய்க்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம்  விதித்துதீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வக்கீல் சுபாஷினி  ஆஜரானார்.

Related Stories: