தூத்துக்குடி, ஆக. 11: தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த சாரணர், சாரணியர் இயக்க தேர்வு முகாமில் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் கல்வி மாவட்டங்கள் இணைந்து குருளையர், நீலப்பறவையினருக்கான சாரண, சாரணிய இயக்கத்தின் சதுர்த்த சரண் மற்றும் ஹூரக் பங்க் தேர்வு தூத்துக்குடி 3வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 5 நாட்கள்நடந்தது.
சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயா சண்முகம் வரவேற்றார். முகாமை மாநிலப் பயிற்சியாளர்கள் கார்த்திகாயினி, சரஸ்வதி, உதவித் தேர்வாளர்கள் ஆனந்த், மணிமேகலை, சர்மிளா, ராஜ்பரத், அபிராமி, உதயம்மாள், வெயிலுகாந்தாள், சத்யா, செல்வமாரி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இதில் தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோல்டன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ஸ்டார் மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணபிள்ளை தொடக்கப்பள்ளி, அழகர் பப்ளிக் பள்ளி மற்றும் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து குருளையர் 57 பேர் மற்றும் நீலப்பறவையினர் 45 பேர் தேர்வில் பங்கு பெற்றனர். குருளையர், நீலப்பறவையினர் அனைவரையும் இறைவணக்கப் பாடல், விதிமுறைகள், உறுதிமொழி, உடற்பயிற்சி, விளையாட்டுகள், மௌக்லி கதை தொகுப்பு, தாரா கதை தொகுப்பு, முடிச்சுகள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை செய்ய வைத்து தேர்வு நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜாண்சன்பால், மாவட்ட ஆணையர் சண்முகம், மாவட்ட பயிற்சி ஆணையர் ஜெயாசண்முகம் செய்திருந்தனர்.