சேத்தியாத்தோப்பு, ஆக. 11: சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி கிராமம், நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்துக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட பகுதியாகும். இங்குள்ளவர்களுக்கு அவர்களுக்கான இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ளவர்களை காலிசெய்ய என்எல்சி நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தி வருகிறது. அதில் சிலர் வீடுகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர். இன்னும் பலர் அக்கிராமத்திலேயே உள்ளனர். இந்நிலையில் கரிவெட்டி கிராமத்துக்கு நேற்று காலை என்எல்சி அதிகாரிகள் சுரங்கம் இரண்டு டிஜிஎம் பிளானிங் ரஞ்சன், சுப்ரமணியன், சிவில் விஜயராகவன் ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் தங்களுடைய ஜீப்பில் கிராமத்தின் கரைகளை பெயர்ப்பதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.