கரூர், ஆக. 11: காற்றின் காரணமாக திருமாநிலையூர் குடியிருப்பு பகுதியில் மின் வயர்கள் அறுந்துள்ளது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சில நாட்களாக கரூரில் மழையை விட சூறாவளி காற்றின் தாக்கம் அதிகளவு உள்ளது. இந்த காற்றின் காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது உட்பட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மேற்புறம் செல்லும் மின்வயர்களில் சில காற்றின் காரணமாக அறுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ள காரணத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.