கரூர், ஆக. 11: கரூர் நகராட்சி பகுதி காலியிடங்களில் அதிகளவு வளர்ந்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதித்து வரும் சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான தாந்தோணிமலை, சணப்பிரட்டி, இனாம்கரூர், வடிவேல் நகர், வேலுசாமிபுரம் போன்ற பகுதிகளை சுற்றிலும் அதிகளவு தனியாருக்கு சொந்தமான காலியிடங்கள் உள்ளன. இதில் குறிப்பாக கரூர் நகராட்சியில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ள தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளில்தான் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அனைத்து அலுவலகங்களும் தாந்தோணிமலை பகுதியில் உள்ளதால், பல்வேறு தரப்பினர்களும் இந்த பகுதியில் அதிகளவு இடங்களை வாங்கி போட்டுள்ளனர். இந்த இடங்களில் கட்டிடங்கள் எதுவும் கட்டாத நிலையில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்களால் இந்த பகுதியில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் மாவட்டங்களில் கரூரும் ஒன்றாக உள்ளது.