புதுவை காவல்துறையை மேம்படுத்த திட்டம்

புதுச்சேரி, ஆக. 8: புதுச்சேரி காவல்துறையை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும் என புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட பாலாஜி வஸ்தவா தெரிவித்தார். புதுச்சேரி காவல்துறை டிஜிபியாக பணியாற்றிய தமிழகத்ைதச் சேர்ந்த சுந்தரி நந்தா டெல்லிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மிசோரத்தில் பணியாற்றிய பாலாஜி வஸ்தவா புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று அதிகாலை அவர் புதுச்சேரி வந்தார். பின்னர் காலை 10.30 மணியளவில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் புதிய டிஜிபியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், டிஐஜி ஈஸ்வர் சிங், சீனியர் எஸ்பிக்கள் ராகுல் அல்வால், நிகாரிகா பட், மனோஜ் பர்ன்வால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.  முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மாியாதையை புதிய டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு எஸ்பிக்கள் அனைவரும் புதிய டிஜிபிக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்ந்து டிஜிபி அலுவலக பகுதியில் அமைந்துள்ள காவல்துறை மியூசியம், கருத்தரங்கு கூடம் உள்ளிட்ட சிலவற்றை அவர் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் புதிய டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், காவலரின் நலன் முக்கியம். 2030க்குள் புதுவை காவல்துறையை மேம்படுத்துவது தொடர்பான திட்டம் வகுக்கப்படும். இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்படுவோம். இன்னும் 2 நாளில் அதிகாரிகளை சந்தித்து பேசிய பிறகு மற்ற விவரங்களை தெரிவிப்பதாக கூறினார்.  அதன்பிறகு கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார். புதுச்சேரி மாநில 32வது டிஜிபியாக பாலாஜி ஸ்ரீவஸ்தவா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: