அரியலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

அரியலூர், ஜூலை 26: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மில்லி மீ்ட்டராகும். நடப்பாண்டில் இதுவரை 116.58 மி.மீ. மழை பெய்துள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1,388 டன் யூரியா, 1,100 டன் டிஏபி, 899 டன் பொட்டாஷ் மற்றும் 1,437 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல்விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 20 டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 15 டன் என கூடுதலாக 35 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 70 டன் மற்றும் தனியார் கடைகளில் 4.5 டன் என மொத்தம் 74.5 டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.மானிய விலையில் நுண்ணீர் பாசன திட்டம் தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் வேளாண்துறையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக அரியலூர் மாவட்டத்துக்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

சிறு, குறு, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை தங்களது வயல்களில் நிர்மாணித்து கொள்ள மானியம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகள் மீதி பங்குத்தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்றார். முன்னதாக இ அடங்கல் செயலி தொடர்பான செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. மேலும் நீர் மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. துணை வேளாண்மைத்துறை இயக்குனர் பழனிசாமி, மருதையாறு கோட்ட செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories: