அரியலூர், ஜூலை 25: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் டால்மியா சிமென்ட் நிறுவனம் மேற்பார்வையில் அரியலூர் மாவட்ட காய்கறி விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் இணைந்து தயாரித்த மரசெக்கு எண்ணெய் விற்பனையை கலெக்டர் வினய் துவக்கி வைத்து பேசியதாவது: அரியலூர் மாவட்ட காய்கறி விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் 2016 துவங்கப்பட்டு நபார்டு வங்கி மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனம் மேற்பார்வையில் 2013 கம்பெனி சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு 400 விவசாயிகளை கொண்டு இயங்கி வருகிறது. அரியலூர் பேருந்து நிலையம் செட்டிஏரி அருகில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் மற்றும் மாவட்டநிர்வாகத்தின் உதவியுடன் தரிசுநில மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சத்துக்கு மானியமாக பெற்று மரசெக்கு எண்ணெய் இயந்திரம், மாட்டுத்தீவனம் தயாரிக்கும் இயந்திரம், மிளகாய் அரவை இயந்திரம் மற்றும் கடலை உடைப்பு இயந்திரம் ஆகிய வேளாண்மை மதிப்புக்கூட்ட இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மரசெக்கு எண்ணெய் வகைகள், மசாலா பொருட்கள், சிறுதானிய மாவுப்பொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்று மதிப்புக்கூட்டி அரியலூர் அரிமா என்ற தரத்தின் பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள். மாதம் 50,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.