நாகர்கோவில், ஜூலை 24: குமரி மாவட்டத்தில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அவ்வையாரம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு செய்தனர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு முழுக்க, முழுக்க அம்மன் வழிபாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். குறிப்பாக ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானதாகும். இந்த மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடி அமாவாசை உள்ளிட்டவை விமரிசையாக கருதப்படும். சிறப்பு நிறைந்த ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடசேரி காமாட்சியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், ஆலமூடு இசக்கியம்மன் கோயில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில், ஆதி பராசக்தி கோயில்கள், முத்தாரம்மன் கோயில்கள் உள்ளிட்ட எல்லா அம்மன் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. காலையிலேயே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நெய் விளக்கு மற்றும் மா விளக்கு வழிபாடும் நடத்தினர்.