தார்ச்சாலை அமைக்க கோரி மனு

அந்தியூர், ஜூலை 24;  அந்தியூர் அருகே தார்ச்சாலை அமைக்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மக்கள் நேற்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சியில் அண்ணமார்பாளையம், அன்னமார்கோவில்,  செட்டியார் ஏரி, ஈசப்பாறை, முனியப்பன் கோவில், மலைக்கருப்புச்சாமி கோவில் வரை சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதை சீரமைத்து புதிதாக தார்ச்சாலை அமைக்க தரக்கோரி கடந்த ஓராண்டுக்கு முன்பு இப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்தியூர் - மலைக்கருப்புச்சாமி கோவில் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன்பின், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை புதுப்பித்து தரப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உமாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்து புதிய தார்ச்சாலை விரைவில் அமைக்க வேண்டும் என கூறி சென்றனர்.

Related Stories: